Sunday 24 August 2014

புது வாசல்

நான்காவது ஆண்டாக சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் சக்ஸஸ் சம்மர் கேம்ப் கொடைக்கானலில் நடைபெற்றது. ஒரு வார கேம்பில் ஒரு நாள் சைட் சீயிங் உண்டு. சைட் சீயிங் என்றவுடன் அனைவரும் பார்க்க விரும்பியது குணா கேவ் மற்றும் சூசைட் பாயிண்ட்.
குணா குகையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை கம்பி போட்டு மூடிவிட்டார்கள். ஆனாலும் கூட்டம் குவிகிறது. சினிமா மோகம் என்பதால் எனக்கு அதுகூட ஆச்சரியமில்லை. இந்த சூசைடு பாயிண்டை பார்ப்பதில் ஏன் இந்த ஆர்வம் என்பதுதான் எனக்கு ஆச்சரியம்.
சூசைட் பாயிண்ட் என்ற பெயரே தவறான வழிகாட்டுதலை தந்துவிடுகிறது என்பதால் அந்த இடத்தை இப்போது பசுமைப் பள்ளத்தாக்கு என்றே முன் மொழிகிறார்கள். ஆனாலும் மக்களுக்கு அது சூசைட் பாயிண்டுதான்.
எல்லோருமே அங்கே போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தோற்றுப் போன இடத்தில் நின்று நாங்கள் ஜெயிப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறார்களோ?
இரண்டு கண்களாலும் ரசித்து முடியாத அளவிற்கு ஏராளமான இடங்கள் கொடைக்கானலில் இருந்தும் தற்கொலை முனைக்கு மட்டும் அளவில்லாத கூட்டம். அதைச் சுற்றி மட்டும் அதிக கடைகள்.
இவ்வளவு ஆழமான பள்ளத்தாக்கை பார்க்கும்போது பசுமைப்பள்ளத்தாக்கு என்பதை விட நம்பிக்கை பள்ளத்தாக்கு என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இன்னும் எவ்வளவு வெட்டினாலும் அழிக்க முடியாது என்று வெட்ட வெட்ட துளிர்த்துக்கொண்டே இருப்பதை நம்பிக்கையோடு நமக்கு பறைசாற்றுகிறது அந்தப் பசுமை.
பள்ளத்தாக்கிலும் பாடம் படிக்கலாம். எது அழித்தாலும் எழுந்து நிற்போம் என்ற பாடம் சொல்வதால் அது இனிமேல் நம்பிக்கை பள்ளத்தாக்கு .