Wednesday 14 January 2015



ரசித்து வாழ... படித்துப் பழகு

ஒரளவு தமிழ் வாசிக்கத்தெரிந்த குழந்தைகள் கையில் இந்தப்புத்தகம் கிடைத்துவிட்டால் நிச்சயம் நிறைய தமிழில் வாசிப்பார்கள். புத்தகங்களை நேசிப்பார்கள். 

நூல் : படித்துப்பழகு    நூலாசிரியர் :  மு.முருகேஷ்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான் நடத்திய மலர்  மாதஇதழின் பின்னால் இருந்து இயக்கியவர் அன்பு அண்ணன் மு.முருகேஷ்.  எப்போதும் உற்சாகம் இதுதான் அண்ணனின் அடையாளம்.

குரலுக்கு கூட ஒரு சுறுசுறுப்பு உண்டு என்பதை அவர் பேச்சிலிருந்துதான் உணர்ந்தேன். அண்ணனின் கையெழுத்தே கவிதையாக இருக்கும்.  

மாத இதழ் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர அதைப்பற்றிய எந்த அடிப்படையும் தெரியாததால் அண்ணன்தான் உண்மையிலேயே இதழ் ஆசிரியர். அக்கறையாக எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தவர்.

பிறகு ஆளுக்கொரு திசையாய் இடம் பெயர்ந்ததால் நடுவில் தொடர்புகள் தொடரவில்லை. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணனை அவரது வந்தவாசி வீட்டில் சந்தித்தேன். அது ஒரு மதிய நேரம். தனது மகளுக்கு கதைகளோடு கொஞ்சம் உணவையும் ஊட்டிக்கொண்டிருந்தார். 

நளன் சமைத்த உணவை ஊட்டியிருந்தால் கூட அப்பொழுது அந்தக்குழந்தை அண்ணன் சொன்ன கதைதான் ருசி என்று சொல்லியிருக்கும்.  அண்ணன் கதை சொன்ன விதம் அப்படி.

"இப்படிக் கதை உண்டு வளரும் குழந்தை நிச்சயம் இந்த உலகை உலுக்கும் வல்லமையோடுதான் வளரும். சரி நாளை இதுபோல என் குழந்தைக்கு கதை சொல்ல முடியுமா?"என்று அப்போது வருத்தப்பட்டேன்.

இப்பொழுது என் குழந்தைக்கும் அண்ணனே கதை சொல்லிவிட்டார். இல்லை எழுதிவிட்டார்.

குழந்தைகளை ஈர்க்கும் கதைகள். வாசிக்கத் தூண்டும் மொழிநடை. 

பத்து பதினைந்து வரிகளுக்குள் முடிந்து விடுகிற எளிய சுவாரஸ்யமான கதைகள். 

ஒவ்வொரு கதைக்கு கீழும் சில கேள்விகள். பார்த்தவுடன் பாடப்புத்தகம் போல இது என்ன கேள்விகள்? என்று  தோன்றியது. ஆனால் அதைப்படித்த என் மகன் ஆர்வமாக பதில் சொன்னதோடு சுய சிந்தனையை தூண்டும் கடைசிக்கேள்விக்கு  ஆர்வமாகவும் புதுமையாகவும் பதிலளித்தான். அப்போதுதான் புரிந்தது . அண்ணன் குழந்தைகளை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார் என்று. நன்றி மு.மு. 

புத்தக கண்காட்சிக்கு குழந்தையோடு செல்கிறவர்கள் இந்தப்புத்தகத்தோடு திரும்பி வந்தால் நிச்சயம் புத்தக கண்காட்சிக்கு சென்ற பயனை அடைவீர்கள்.














No comments:

Post a Comment