Sunday 18 January 2015

கமர்கட் கதைகள்

கமர்கட் வைத்துக்கொண்டு சுற்றுபவர் விஷ்ணுபுரம் சரவணன் நாம் இழந்த சுவையை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக.  அவர் எழுத்தும் அப்படித்தான்.

கமர்கட்டை கடித்து சாப்பிடக்கூடாது. வாயின் ஒரத்தில் அதக்கிக்கொள்ள வேண்டும்..  மெல்ல மெல்ல கரைந்து அந்த இனிப்பு நமக்குள் இறங்கிக்கொண்டிருக்கும்.

கமர்கட்டின் சுவையறிய ஒன்று அதை வாங்கிச் சாப்பிடுங்கள். அல்லது விஷ்ணுபுரம் சரவணனின் வாத்து ராஜா புத்தகத்தை படியுங்கள். இல்லை இல்லை பக்கத்தில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு படித்து சொல்லுங்கள். அப்போதுதான் கமர்கட் அனுபவம் கிடைக்கும்.

அணில் பேசுமா? அது நமக்கு கேட்குமா?

அதைக் கேட்கிற பிரேத்யகமான காதுகள் நமக்கு இருந்தால் கேட்கும். அப்போது கொய்யா எங்கே பழுத்திருக்கும் என்று அணில் நமக்கு சொல்லித்தரும்.

அமுதா ஒரு நாள் தவறாமல் செய்கிற வேலை சுடுகாய்களை அள்ளி குளத்தில் எறிவதுதான். யாருக்கும் சூடுபட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற குழந்தை மனங்களை விஷ்ணுபுரம் சரவணன் போகிற போக்கில் பதிவு செய்து விட்டு போகிறார்.

யாருக்கும் சூடுபட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற அமுதாவை டீச்சர் சொல்லினால் சுடுகிறார். மண்ணில் முழங்கால் போடச் சொல்கிறார். இந்த டீச்சர்களுக்கெல்லாம் வெல்லம் கொடுக்கலாம். அப்போதாவது குழந்தைகளிடம் இனிப்பாக பேசுவார்கள். அமுதாவை கேட்டால் அவள் அப்படித்தான் சொல்வாள்.

கதையில் வரும் அமுதாவைப்போலவே எல்லாக்குழந்தைகளும் கதையை தேடி ஒடிக்கொண்டிருக்கின்றன. இது புரிந்ததால்தான் விஷ்ணுபுரம் சரவணன் கதைகளோடு குழந்தைகளை தேடி ஒடிக்கொண்டிருக்கிறார்.

நாளை வருவோம்.வாத்து முட்டைகளை காட்டனும் என்று காவலாளிகள் சொல்கிறார்கள். அப்புறம் என்னாச்சி? இந்த இடம் வருகிற போது சஸ்பென்ஸை குழந்தைகளால் பொறுமையாக கடக்க முடியுமா? என்னால் முடியவில்லை.
 
வாத்துக்களுக்கும் அதை நேசிக்கிற சுந்தரிக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனம் அடித்துக்கொள்கிறது.

டிரைனில் என் மகன் சதானந்துக்கு இதைப்படித்து சொல்லிக் கொண்டிருக்கும்போது பக்கத்திலிருந்த குழந்தைகள் ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொண்டன. காய்ந்து போய் இருந்த அந்தக்கண்களில் கதை வறட்சி தெரிந்தது.

ஒவியங்கள் வரைந்த ஒவியருக்கு வாழ்த்துக்கள் (பெயரே அதுதான். இப்படியெல்லாம் வைத்துக்கொண்டால் குழப்பம் வராதா? )

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை மலரச் செய்ய வேண்டும் என்றால் இதைப்படித்துச் சொல்லுங்கள். முழுவதுமாக படிக்க வேண்டும் என்று கூட இல்லை. இரண்டு பக்கத்தை படித்து விட்டு அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். குழந்தையாக இருந்தால் கூட எழுத்துக்கூட்டியாவது இதை படித்துவிடுவார்கள். கதை அப்படி.


எல்.கே.ஜி படிக்கும் என் மகள் சாதனா, விஷ்ணுபுரம் சரவணனை “என் ப்ரெண்ட்” என்கிறாள். ஏன் என்று இப்போது புரிகிறது.

என் மகளை கதை சொல்லச்சொன்னேன், விஷ்ணுபுரம் சரவணனின் ப்ரெண்ட் என்பதால். நம்ப முடியாததையெல்லாம் சொன்னாள்.

குழந்தைகள் சொல்வதையெல்லாம் நம்புவதற்கு நீங்கள் குழந்தைகளை நம்புகிறவர்களாக இருக்க வேண்டும். விஷ்ணுபுரம் சரவணனை போல...


No comments:

Post a Comment