Saturday 17 January 2015

சரோஜா தேவிகளின் தேவன்கள்

யுவகிருஷ்ணா ரொம்ப நல்லவர். எந்த அளவுக்கு என்றால் கடன் கொடுப்பதற்கு முன்பு ஒருவரைப்பற்றி விசாரித்தால் அவரிடமே போனைக் கொடுத்து உங்களைப்பற்றி விசாரித்தார்கள் என்று சொல்லும் அளவுக்கு.

எனக்கு ஐம்பதாயிரம் இழப்பு. ஆனால் அந்த வயிற்றெரிச்சலுக்கும் இந்த விமர்சனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

யுகிருஷ்ணா என்ற பெயர், ‘நல்ல எழுத்தாளர்’ என்று பிராண்டிங் ஆகியிருப்பதால் இந்தக்கட்டுரை முழுக்க நான் யு.கி. என்ற பெயரையே பயன்படுத்தப்போகிறேன். வேண்டுமானால் யு.கி யும் இந்த யோசனையை தொடரலாம்.

சரி. இனி யு.கியின் சரோஜாதேவி கட்டுரைகளுக்கு வருவோம். பதின் பருவத்தில் நடக்கும் பாலியல் தேடல்கள் பற்றிய கேலியான கட்டுரைகள். அதனால் அதே பாணியில் என் விமர்சனமும்.

சவிதா பாபி கட்டுரையில் இணையத்தில் எல்லையில்லா ஆபாசத்தை கட்டுப்படுத்தும் விசயத்தில் வளைகுடா நாடுகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதிலிருந்தே யு.கியின் சமூக அக்கறை புரிகிறது.
விர்ச்சுவல் விபச்சாரம் கட்டுரையில், யு.கி. தன் எழுத்துக்களை படிக்கிற எவரும் ஏமாந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் எடுத்த முயற்சிகளை படிக்கிற போது கண்களில் நீர்  கசிகிறது.

தன் வாசகன் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய எழுத்தாளர் என்பதை உணரும் போது இந்தப்புத்தகத்தை படிக்கிற வாசகன் நிச்சயம் இவருக்கு மனதுக்குள் நன்றி சொல்வான்.

எழுதுவதையெல்லாம் எழுதிவிட்டு கடைசியில் யார்தான் இதையெல்லாம் சரிசெய்யப்போகிறார்களோ என்கிற தன் சமூக அக்கறையையும் கட்டுரையின் முடிவில் அவர் சேர்க்கத்தவறவில்லை.

இக்கட்டுரையில் நான் என்று வரவேண்டிய இடத்தில் எல்லாம் சாமியார்கள் பயன்படுத்தும் நாம் என்ற சொல்லை யு.கி பயன்படுத்துவதில் உள்ள குறியீடு என்ன? என்பதுதான் எனக்கு கடைசிவரை விளங்கவில்லை.

சரோஜாதேவி கட்டுரை படிக்கிறபோது மண்சார்ந்த தனித்தன்மை இல்லையே என்ற ஆதங்கத்தில் இவரே மீட்டுக்கொண்டு வந்துவிடுவாரோ என்ற பயம் நம்மை சூழ்கிறது.

போட்டுத்தாக்கு கட்டுரையில் நல்ல வார்த்தைகள் எல்லாம் எப்படி கெட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று ஆதங்கப்படும் கட்டுரையில் அங்கதம்தான் என்றாலும் கூட தேவையில்லாமல் விளக்கு விருதை கிண்டலடித்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது..
சன்னிலியோன் பற்றிய கட்டுரையில் சிம்புவுக்கு கூட தெரியாத விஷயங்களை பகிர்கிறார். கட்டுரை என்று வந்துவிட்டால் இவர் செய்கிற கள ஆய்வுக்கு அளவேயில்லை.

பிட்டு பார்ப்பது ஒரு குற்றமா? கட்டுரையில் பிட்டு பார்ப்பது ஒன்றும் குற்றமில்லை. பிட்டு படம் எடுப்பதுதான் தவறு என்று வாதிடுகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  பார்ப்பதனாலேதானே எடுக்கிறார்கள். யு.கி தன் அடுத்த கட்டுரையில் விளக்கட்டும்.

யு.கி. தன் கட்டுரைகளில் எல்லா பிராபளத்தையும் சர்வ சாதரணமாக டீல் செய்கிறார்.

இந்தியாவின் முதல் 3டி படத்திற்காக இவர் கொடுக்கும் குரலை பார்த்தால் இவரே ஒரு அண்ணாவாக மாறி நீண்ட நெடிய போராட்டத்தை தொடங்கிவிடுவாரோ என்ற பயம்தான் வருகிறது.

புத்தகத்தில் மிகவும் நெருடலாக இருந்தது அமலா பால் பற்றிய கட்டுரைதான். என்னதான் திரைப்பட நடிகை என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் அழகைப்பற்றி எல்லை மீறி கிண்டலடிப்பது யு.கியின் மீதான மரியாதையை குறைத்துவிடுகிறது.. கண்டிப்பாக இந்த கட்டுரையை அடுத்து பதிப்பில் தவிர்க்க வேண்டுகிறேன்.

எள்ளல் நிறைய இடங்களில் எல்லை மீறிவிடுகிறது. எல்லை மீறிய எண்ணங்களைப்பற்றிய கட்டுரைகளை எழுத இந்த  மொழிதான் சரி என்று நினைத்திருக்கிறார் யு.கி.

யு.கியிடம் ஜொள்ளுவதற்கு இன்னும் ஏராளம் விஷயங்கள் கைவசம் இருக்கும்போல தெரிகிறது. நிறைய கள ஆய்வுகளும் செய்து வருவார் போல தெரிகிறது.

எல்லா நாடுகளைப்பற்றியும் எழுதியிருப்பதால் இவருக்கு இருக்கும் உலகளாவிய அறிவு நம்மை மிரட்டுகிறது.

எழுத்தாளரும் பதிப்பாளரும் சேர்ந்து கொளுத்தும் விதமாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு யாராவது அதை கொளுத்திய பிறகு புகழ்  பெற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்களோ என்று சந்தேகம் கூட வருகிறது சில கட்டுரைகளை படிக்கிறபோது.

மிக நெருங்கிய நண்பனிடம் கூட பேசத்தயங்குகிற சில விஷயங்கள் இதில் பேசப்படுவதால் யு.கியை ஒரு நண்பனாக உணர்வார்கள் என்பது இந்நூலின் மூலம் யு.கி. பெருகிற பயனாக இருக்கும்.

சித்த வைத்தியர் சிவராஜிடம் திட்டு வாங்கக்கூடிய அளவுக்கு கெட்டுப்போனவர்களுக்கு இந்தப்புத்தகம் பயன்படாது. ஆனால் ஆரம்பநிலையில் உள்ள ஆசாமிகள் இதைப்படித்தால் தவறாக யாரிடமும் சிக்காமல் தப்பிப்பார்கள் என்பதால் இதை விழிப்புணர்வு நூல் வகையிலேயே சேர்க்கலாம்.

இதைப்படித்துவிட்டு டைம்பாஸிற்கோ அல்லது சந்தானத்திற்கு டிராக் எழுதவோ இவரைக் கொண்டு போய்விடுவார்களோ என்று தோன்றுகிறது.

யு.கி இதே அங்கதச்சுவையில் நிறைய எழுதவேண்டும். ஆனால் சரோஜாதேவி போதும்.


யுவகிருஷ்ணா எழுத வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

4 comments:

  1. நல்லதோர் அறிமுகம்..
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் பணியை நீங்களும் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

      Delete
  2. வாங்கிவிட்டேன் பயமுறுத்துகிறீர்களே

    ReplyDelete
  3. பயமுறுத்தவில்லை. களவும் கற்று மற.

    ReplyDelete