Friday 16 January 2015

நாமும் இளம் பருவத்து பெண்களும்..

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்


என் மதிப்பிற்குரிய அண்ணி அ.வெண்ணிலாவின் சிறுகதை தொகுப்பு. (அண்ணன் மு.முருகேஷ்) விகடன் வெளியீடு.

அண்ணியின் கவிதைகளைத்தான் அதிகம் படித்திருக்கிறேன். கவிதைகள் பேசிய அதே பேசு பொருட்கள் இன்னும் ஆழமாக.

நல்லவன்னு சொல்லிக்கிற கெட்டவன்களையும் கெட்டவன்னு சொல்லிக்கிற நல்லவன்களையும் பற்றிய பகிர்தல்கள்..

இந்தக்கதைகள் முழுக்க நான் ஆண்களைத்தான் படித்தேன். பெண்களும் வருகிறார்கள். அந்த பெண்களுக்காக வருத்தப்பட்டேன்.. அந்த ஆண்களுக்காக வெட்கப்பட்டேன்.

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் புத்தகத்தின் தலைப்புக்கதை, சிறந்த சிறுகதை மற்றும் சிறந்த மனோதத்துவ கட்டுரை இரண்டுக்கும் இடையில் இருக்கிறது.

முதல் இரண்டு கதைகளில் அந்த சிறுமிகளுக்கு துன்பம் இழைத்தவர்கள் யார் என்பது நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. அந்த சிறுமிகளுக்கும் தெரியவில்லை. நாம்தான் அவர்களை கண்டறியவேண்டும். அவர்களை களை எடுக்க வேண்டும்.

ஒரு படி நெல்லுச்சோறும் சில தண்ணீர்ப் பாக்கெட்டுகளும்...  பொங்கி வரும் ஆறாக ஒடிக்கடக்கும் சிறுகதை. நிலமாக நீராக நம்மை தாங்கும் பெண்கள் பற்றி பேசுகிறது. நாடகத்தன்மை கொண்ட முடிவாக இருந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாத ஒரு தாகம் போல உணர்ச்சி பிசைவில் மனதை கொண்டு நிறுத்திவிடுகிறது.

அடையாளம் எனக்கு தாடிதான் அடையாளம். என் மனைவிக்கு கண்ணாடி. அதை மாற்றி கொண்டார் லேசர் ட்ரிட்மென்ட் மூலம். இப்பொழுது என் மனைவியின் அடையாளம் என்ன? படிக்கிற போது அவருக்கு, ‘நல்லா படிப்பா’ என்பது அடையாளம். எனக்கும் அதுதான் அடையாளம். ஆனால் புத்தகங்கள் வேறு.

அடையாளங்கள்தான் நம்மை புண்படுத்துகிறது. நம் அடையாளங்களால்
அதிகம் புண்படுத்தப்படுகிறோம். ஆனால் இந்தக்கதை அடையாளத்தை புண்படுத்திய பெண் பற்றிய கதை.

மாணவிகளின் வகுப்பறையில் நம்மையும் அமர்த்தி கொஞ்சம் நேரம் வாழவைத்து அவர்களின் வலியையும் உணர்த்துக்கிறது.

ஒரு எழுதுகோலும் சில திருவிளையாடல்களும் சிறுகதை எள்ளல் மிகுந்த மொழி நடையில் எழுதுகோலில் எழுதப்படுகிற எழுத்துக்கும் முகநூலுக்காக எழுதப்படுகிற எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது

வெளிய  பெண்களின் கஷ்டத்தை ஆண்கள் புரிந்து கொண்டுவிட்டால் தொல்லை கொடுக்க மாட்டார்கள் என்று இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தொல்லை படுகிற இடங்களில் கூட போய் நின்று கொண்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை படித்த போது ச்சீ என்றிருந்தது.  ஒரு பெண் வெளிய செல்கிற இடத்தைக்கூட விட்டுவைக்க மாட்டார்களா?

சீனாவில் பிரசவ வலியை ஆண்கள் உணர்வதற்கு இயந்திரம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் உங்களை பிணைத்துக்கொள்ளும்போது பிரசவ வலியை உணர முடியும்.  வெண்ணிலா எந்தச்சிரமமும் இல்லாமல் தன் எழுத்துக்கள் மூலமாகவே பெண்களின் எல்லா வலியையும் நமக்கு கடத்தி விடுகிறார்.

எல்லாப்பெண்களுக்கு எதிரிலும் ஒரு சில நாய்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறது. சில சமயம் குரைக்கிறது. சில சமயம் கடிக்கிறது இதைத்தான் இந்தப்புத்தகம் பேசுகிறது என்பதை அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.

இதை அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டும். ஆண்கள் இரண்டு முறை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். 

இதைப்படிக்கிற பெண்களின் கண்ணீல் துளிர்க்கிற நீர், மனம் திறந்து பேச
முடியாதவைகளைப் பற்றியெல்லாம் பேசியதற்கான நன்றியாக இருக்கும். ஆண்களின் கண்ணீல் துளிர்க்கிற நீர் அவர்கள் வீட்டு பெண்களிடம் காட்டப் போகும்  அன்பாக இருக்கும்.


1 comment:

  1. The sequence of the Sufferings faced by the young Children should teach a Moral Lesson to the Mankind.

    ReplyDelete