Sunday 18 January 2015

மாணவர்களிடமிருந்து நல்லாசிரியர் விருது வேண்டுமா? இந்தப்புத்தகத்தை படியுங்கள்.


என் நண்பர் திரு ஶ்ரீரசா வரைந்த இந்தப்படம் என்ன சொல்கிறது? என்பது உங்களுக்கு புரிந்துவிட்டால் நீங்கள் இந்தப்புத்தகத்தை படிக்கும் அவசியம் இருக்காது.  இல்லையென்றாலோ நீங்கள் ஒரு ஆசிரியர் என்றாலோ உடனே 'ஆசிரிய முகமூடி அகற்றி..' புத்தகத்தை வாங்கி படித்து விடுங்கள்.

டீச்சர் மேன் என்கிற பிராங்க் மக்கோர்ட்டின் புத்தகத்தை வாசித்தபோது தனக்குள் கிளர்ந்த அனுவங்களை பதிவு செய்திருக்கிறார் பேரா. ச. மாடசாமி  ஆசிரிய முகமூடி அகற்றி..' . என்ற சிறிய நூலின் மூலம்.

வகுப்பை அமைதியாக வைத்திருப்பதே சிறந்த ஆசிரியருக்கான இலக்கணம் என்பதை மாற்றிய இலக்கியம் டீச்சர் மேன்.

மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் நடந்து சலித்த பாதையிலிருந்து விலக, விடுபட இந்நூலை வாசிப்பது இல்லை இல்லை மனப்பாடம் செய்வது அவசியம்.

மாணவர்கள் பார்வையால் அங்கீகரிக்கும் வகுப்புகளை எப்படி நடத்திக் காட்டினார் என்பது இதில் இருக்கிறது. இதை வாசித்தால் நூல் பிடித்து நிச்சயம் நீங்கள் டீச்சரை மேன் புத்தகத்தை தேடத் தொடங்குவீர்கள்.

எல்லா முகமூடிகளும் அசிங்கமானவைதான். ஆனால் நாம் சகித்துக்கொள்கிறோம். மாணவர்களால் அது முடிவதில்லை. அதனால் ஆசிரிய முகமூடிகள் மிகவும் அசிங்கமானதாகிறது. அதை பிடுங்கி எரிகிறது இந்தப்புத்தகம்..

ஒரு ஆசிரியருக்கு வகுப்பைறைக்குள் நுழைகிற முதல்நாள் கடினமான நாள் மட்டுமல்ல; முக்கியமான நாளும் கூட. முதல் நாளில் செய்யும் ஒரு தவற்றைச் சரிப்படுத்த மாதங்களாகும். ஆனால் இந்தப் புத்தகத்தை படித்தால் ஒரு சில நாட்கள் போதும். 

பேசத்தூண்டும் தொடக்கம் பகுதி, ஆசிரியர்களை செயல்படத் தூண்டும் தொடக்கமாக அமைகிறது..

"மாணவர்களிடம் கதை சொல்வதே பாடம் நடத்துவது மாதிரிதான்" 

"மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே"

"நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்துவிட்டது."

இதெல்லாம் மக்கோர்ட் சொல்வது.

"வார்த்தைகளுக்கு கட்டுப்படாதவர்கள் வாய்ப்புகளுக்கு கட்டுப்படுவார்கள்."

"இன்னொரு உளியை  அந்தச் சிற்பம் ஏற்காது"   ...  இதெல்லாம் பேராசிரியர் ச.மா சொல்வது.

மாணவ மனங்களை புரிந்து கொள்வதில் இருவரும் சரிக்கு சமமாக இருக்கிறார்கள். பின்ன பேராசிரியர் ச.மா.  நம்ம ஊர் மக்கோர்ட் இல்லையா?

"மேலும் படிப்பது, பதவி உயர்வு பெறுவது எனத் தங்கள் வளர்ச்சி பற்றியே ஆசிரியர்கள் சிந்திப்பார்களானால், மாணவர்களுக்குக் கற்பிப்பது யார்?" என்ற கேள்வி ஆசிரியர்களை நோக்கி பிரம்பு போல நீள்கிறது.

"என் மகன் ரசித்து படிக்கிறானா?" என்று வித்தியாசமாக கேட்ட முதல் பெற்றோருக்கு மக்கோர்ட் நன்றி சொல்கிறார். நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும். ஒரு வேளை இந்தப்புத்தகம் அதற்கு உதவி செய்யலாம்.

புத்தகத்தை படித்து முடித்ததும் நான் டாய்லெட்டை சுத்தம் செய்ய எழுந்தேன். ஏன் என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிறகு நீங்களும் அப்படி செய்வீர்கள்.

2 comments:

  1. அன்புக்குரிய நண்பர் கிருஷ்ண வரதராசன்
    உங்கள் மதிப்புரை வாசித்து நெகிழ்ந்தேன்.
    நன்றி,
    ச.மாடசாமி.

    ReplyDelete
  2. நன்றி அய்யா. தாங்கள் சென்னை வரும்போது கண்டிப்பாக சொல்லவும் தங்களை வந்து சந்திக்கிறேன்.

    ReplyDelete